Wednesday, August 27, 2008

உன்னை இழந்ததற்கு பதிலாய்....

நீயும் நானும்
நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது
முடிவில்லாமல்....

நாம் பேசிச் சிரித்த
நிமிடங்களுக்கு சாட்சியாய்
மெளனித்து நிற்கிறதே
அதோ அந்த மரத்தை
நினைவிருக்கிறதா?

யாருக்குத் தெரியும்?
சலசலத்துக் கொண்டிருக்கும்
அந்த பறவைகளின் பேச்சு
நம்மைப் பற்றியதாகக்கூட
இருக்கலாம்!

உண்மை சொல்!
உன்னை எனக்கு
நினைவூட்டும் எதுவும்
என்னை உனக்கு
நினைவூட்டவில்லையா?

உன் பார்வை காட்டும் பரிவு..
அன்பில் நனைந்த உன் கோபம்..
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்....

அய்யோ!

உன் பிரிவால்
உயிர் கரையும் பொழுதுகளில்....
உன்னை இழந்ததற்கு பதிலாய்
உயிரை இழந்திருக்கலாம்
என்றே தோன்றுகிறது..