Monday, August 16, 2010

காதலின் பின் கதவு - பழநிபாரதி

உனக்காக வைத்திருந்த
முத்தத்தில்
ஃப்ளோரைட் வாசம்!

உனக்காகப் பறித்த பூவில்
டீசல் தூசி!

உனக்காக வாங்கிய
வாழ்த்து அட்டையில்
மரத்தின் இரத்தம்!

எனது உலகத்திலிருந்து
ஏதுவுமில்லை உனக்கு!

காற்றை
அழுக்குபடுத்தாமல் ஓடும்
உனது குட்டிக் கார்!

வன்முறை அறியாத
இராணுவ வீரன்!

சிரிக்கக் கற்றுக்கொடுக்கும்
சீனத் தங்கை!

விபத்துகளைச் சந்திக்காத
விமானம்
ரயில்!

மதங்களற்ற
உனது பொம்மைகளின்
உலகத்திலிருந்து
முடிந்தால் கொடு
எனக்கொரு சிரிப்பை!

################################


இசைத் தட்டின் ஞாபகத்தில்
கடிகாரத்தில் படுத்துக் கிடக்கும்
முட்கள் நாம்!

பசி தீர்ந்த நகங்கள் பற்கள்
அபரிமிதமாய் விட்டுச் சென்ற
இறைச்சித் துண்டின் தனிமை
நம் காலம் !

தழுவும் அலைகளின் லயிப்பில்
பேசத் திணறிய நம் பாறைகளின்
உன் பிம்பங்கள்
உருவாக முடியாமல்
உடைந்து நொறுங்கின!

வண்ணத்துப் பூச்சிகள்
மாமிசம் உண்ணும் கனவுகளுக்கு
நீ உன் உறக்கத்தை
விட்டுக் கொடுத்திருக்கிறாய்!

கோபுரத்தில் புறாக்களும்
பிரகாரங்களில் வௌவால்களும்
ஒரே கோயிலில்
எப்படி வாழ்கின்றன என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

யுகபாரதியின் திருமண அழைப்பிதழ்....


தேவதை தேவையில்லை

தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்

படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு!

இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்!

காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்.
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு

சமயத்தில் நிலவு என்பேன்!
சமையலில் உதவி செய்வேன்!
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்!

ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு..

வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்!

வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்!

இளையபாரதி

'நினைச்சா பொறையேறும்'
நிஜமாயிருந்தா…
நீ செத்திருக்கனுமே
இந்நேரம்!

+-+-+-+-+-+-+-+-+-+-+-

நிலாவே…
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலீரம் மனதில் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னை போலவே
இன்னும் சிலதும்…
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை.

+-+-+-+-+-+-+-+-+-+-+-

விலக
விலக
புள்ளிதானே…
நீ எப்படி
விசுவரூபம்?

+-+-+-+-+-+-+-+-+-+-+-

உருவம் தவிர்த்து
உணரத்தொடங்கு
காதலோ – கடவுளோ!

+-+-+-+-+-+-+-+-+-+-+-
நான்
. ஆனாலும்
நீ மட்டும்
, ...


இளையபாரதி

சுகுமாரன்

ஸ்தனதாயினி


இனிய வெண்கலப் பழங்கள்
உன் மார்பகங்கள்
உள்ளே
உயிர்தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால்மேகம்.
ஒன்றில்
தாய்மையின் கசிவு
மற்றதில்
காதலின் குழைவு
உன் இடது முலை அருந்துகையில்
என் கண்களில்குழந்தமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடதுமுலை பரிந்து சுரக்கும் ஊற்று
உன் வலதுமுலை அருந்துகையில்
என் கண்களில்காதலின் உற்சவம்
அப்போது உன் வலதுமுலை
நெகிழ்ந்து பெருகும் அருவி
குழந்தைமையும் காதலும் கனிந்தமனவேளையில்
உன் மார்பகங்களின் இடைவெளியில்
உணர்கிறேன்
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை.


உன் பெயர்

உன்பெயர்-

கபாலத்தின் உட்கூரையிலில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணைவரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணிநிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி

உன் பெயர்-

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச் சொல்லும் விநோதக் கோரிக்கை*
கொய்யபட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின்விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம், அலைச்சலில் ஆசுவாசம், குதூகலம்.
நீயே எந்துக்கம், பதற்றம், பிரிவின் வலி.

காலம் அறியும்; உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு
நீயே அறிபவள்;நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரா உனக்கு?

உன் பெயர்-

இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்

Friday, August 6, 2010

அண்ணன் அறிவுமதி



வாழ்த்து அட்டை

முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

#####################

எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.

#####################

தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.


-அண்ணன் அறிவுமதி

பெயர் தெரியாத கணம் .......


பார்க்கக் கிடைத்த

கொஞ்சம் வானத்தில்
எனது தனிமையைப் பகிர்ந்துகொள்ள
வரும் போகும் பறவைகள்!

பெயர் தெர்ந்தவை சில
பலவற்றிற்குத் தெரியாது

எங்கிருந்து
எதுவரைக்குமென
யோசிக்குமுன் கடந்துவிடும்
என்னை அவை

நான் யோசித்துக்கொண்டிருப்பேன்
தடயங்களற்றுப்
பறக்கும் சுகத்தை
வீழ்ந்துவிட்ட நட்சத்திரமாய்
என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கும் வானம்

- பழநிபாரதி


அண்ணன் அறிவுமதி

ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள்
நாம்!
அன்பே!அன்பே!

தாஜ்மஹாலில்
வசிப்பது
மும்தாஜா?
காதலா?

மறப்பதென்றால்
அது முடியவில்லை.
நினைப்பதென்றால்
மனம் சலிப்பதில்லை
-அண்ணன் அறிவுமதி

உறைந்த நதி.......

எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய விரல்கள் இல்லை

எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை

எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை

உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது பூசணி

உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை

நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி

நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டுவிட்டாய்

உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால்
ஒரு கடிதம் எழுது....

- பழநிபாரதி


ரா.பார்த்திபன்


சிறகுகள் இரண்டு
சேரும்
இருந்த
ஓர் இதயம்
தொலையும்
-=-
அவள்
கண்களைப் பார்த்தால்
மீன்!
கண்களால்
அவள் பார்த்தால்
தூண்டில்!
-=-
புதைத்தது
ரோஜா
முளைத்தது
மல்லிகை!
-=-

நீ இல்லாத போது...

உனக்காக
எப்போதும் வாங்கும்
இரண்டு முடி மல்லிகையை
இன்று
பூக்காரக் கிழவி
விற்காமல் எடுத்துப் போவது
எத்தனைச் சோகமானது!

*****************************
நீ பொரி போட்டுப்

பசியாற்றிய
கோயில் குளத்தின் மீன்கள்
இன்று தண்ணீர் குடித்துத்
தண்ணீர் குடித்து
உன்னைத் தேடிய தவிப்பு
எத்தனை துயரமானது!

*****************************
நீ வராத
வெறுமையில்
பூங்காவின் காவலாளிக்கு
ஒரு புன்னகையைக் கூட
திருப்பித் தராமல்
இன்று நான் வெளியேறுவது
எத்தனை உறுத்தலானது.

- பழநிபாரதி


உன் நினைவுகள்!

உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
அழைத்துக்கொண்டு
கிளம்பினேன்...

திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...


எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!

நகுலன்

நான்

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?


நான்(2)


நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன்போதுமா
என்று சொல்லிவிட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.

தபூ சங்கர் ....


ஒரு வண்ணத்துப் பூச்சி

உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது!
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே
இருக்கிறது? என்று!"

################################

வீட்டிற்கு
ஒரு மரம்
வளர்ப்பார்கள்!
உங்கள்
வீட்டில் மட்டும்
ஏன்
ஒரு மயில்
வளர்க்கிறார்கள்?

################################

கரையில் நின்றிருந்த
உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன
கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில்
பறித்தே விட்டோமா
நிலவை!' என்று.
-தபூ சங்கர் ....

கவிதையானதுதான் காதல்

நகம் கடித்துக் காத்திருக்கும்
தெரு முனையில்...
எதிர்வரும் பெண்களிடமெல்லாம்
உன் சாயல்.

பொழுதை இருட்ட வைத்து
கடைசியாய் நீ வருவாய்
புன்னகையுடனும்
எனக்கான ரகசிய முத்தங்களுடனும்.

காத்திருப்பின் வலியுடன்
சுகமானதுதான் காதல் எப்போதும்.


நான்காய் மடித்து
நீ தரும் கடிதங்களில்
பூசு மஞ்சள் படர்ந்த வாசனை.
ஒளித்த இடம் கேட்பேன்
பொய்க் கோபத்துடன் கைகள்
ஓங்குவாய்.

உன் கடிதத்தை
வாசிக்க வேண்டாம்
சுவாசிக்க வேண்டும்
என்பேன்.
செல்லமாய்க் குட்டுவாய்.

இனிமையானதுதான் காதல்
எப்போதும்.


வீட்டில் யாருக்கும் தெரியாமல்
நள்ளிரவில் கண்விழித்து
உனக்குக் கடிதம் எழுத
விருப்பம் என்றேன்.
தீர்ந்த மைப்புட்டியில்
இரண்டு மின்மினிகளை அடைத்து
மேசைவிளக்கெனப்
பரிசளிக்கிறாய்.

கவிதையானதுதான் காதல்
எப்போதும்.

முதல் முத்தம் புறங்கையில்.
இரண்டாவது
ஃபேர் அண்ட் லவ்லி மணக்கும்
கன்னத்தில்.
மங்கிய இரவில்,
பூங்காவில்
தற்செயலாய் நீ
முகம் நிமிர்ந்த கணத்தில்
மூன்றாவது.
முத்தத்தை விடவும் இனிமையானது
பின் நிகழும் மௌனம்.

அவஸ்தையானதுதான் காதல்
எப்போதும்.



மஞ்சள் தாவணி என்றால்
நாளைக்குக் கோயிலுக்கு வா.
நீலநிற சுடிதார் என்றால்
கடிதம் கொடுத்தனுப்பு.
இளம்பச்சை என்றால்
வீட்டில் யாருமில்லை.
தொலைபேசு.

சங்கேதங்களால் ஆனதுதான்
காதல் எப்போதும்.



அம்மாவிடம் கோயிலுக்கு.
அப்பாவிடம் கம்ப்யூட்டர் வகுப்பு.
அண்ணனிடம் தோழி வீட்டுக்கு.
அகாலத்தில் நாம் சந்திக்க
உன்னிடம் ஆயிரம் பொய்கள்.

உண்மை ஒருநாள்
எதிரியாய் வரும்வரை
எனக்கும் உண்டு சில உபாயங்கள்.

பொய்களால் ஆனதுதான் காதல்
எப்போதும்.


கண்காணிக்கப்படும� �
காதல்நாட்களில்
நள்ளிரவின் இருளுக்குள்
தொலைபேசியின்
இருமுனைகளிலும்
குரல் இல்லாது
வெகுநேரம்
மௌனமாய் அழுதிருக்கிறோம்
நினைவிருக்கிறதா?

சோகமானதுதான் காதல்
எப்போதும்.



முத்தம் கேட்டால்
காகிதத்தில் முத்தமிட்டுக்
கடிதம் தருவாய்.

சிறுதுயில் கொள்ள
உன்மடி கேட்டால்
நீண்ட கனவுகள் தருவாய்.

உடனிருக்கும் வாழ்க்கை
கேட்டால்
முழுவாழ்க்கைக்குமான
நினைவுகள் தருவாய்.

ஏமாற்றமானதுதான் காதல்
எப்போதும்.



தபூ சங்கர் ....


கரையில் நின்றிருந்த

உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன
கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில்
பறித்தே விட்டோமா
நிலவை!' என்று.

################################

காற்றோடு

விளையாடிக் கொண்டிருந்த உன்
சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில்
செருகிக்கொண்டாய்!
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.

################################

நான் சமைத்த பாவக்காயை

நீ விரும்பிச் சாப்பிடும்போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகிவிடுகிறது..

-தபூ சங்கர் ....