Monday, January 31, 2011

யுகபாரதி கவிதைகள்..


நாம் நின்று பேசிய
நுணா மரத்தை வெட்டி விட்டார்கள்..
நீ
விட்டுப்போன சுவடுகளில்
வெயில் படுமே என்றுதான்
வருத்தப்படும் அந்த மரமும்!

#################################


ஒரு வழிக் கண்ணாடி
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
என் காதல்;
ஆற்றாமை பூசிய பாதரசம்
அழிந்து உனக்கது
புலப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன் நான்!

#################################


திசைகாட்டிகள்
நிறைந்த பாதைகளிலும்
தொலைந்து போகும் நான்
மிகச்சரியாக பிரயாணித்து
உனை அடைந்தது
இந்த காதல் பயணத்தில்தான்!
**
பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்..
அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன்..
வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை...

#################################


உடைந்தால் கலங்குவாயென்று
இரப்பர் வளையல்கள் வாங்கினேன்!
நீயோ
அளவு சரியில்லையென்று
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!


#################################


உன் முந்தானையால்
தலை துவட்டி விடுவாய்
என்பதற்காகவே
குடை மறந்து
வந்த மழைநாளில்
ஜீன்ஸும்

டிஷர்டுமாய்
நின்றிருந்த உன்னை
என்ன சொல்லி
திட்டுவது


#########################


கவிதையில்
எல்லாம் சொல்லி
விட முடியாது
உன் அழகை!
எழுதும்போதே
கூடிக்கொண்டிருக்கும்
அழகு
உனக்கே உண்டானது!
**
சாலை பாதுகாப்பு வாரத்தில்
முதல் கட்டமாக‌
உன் க‌ல்லூரிக்கு முன்னே
'ஜாக்கிரதை. இங்கே தேவ‌தைக‌ள் குறுக்கிடும்'
என குறியீடு வைக்க‌
திட்டமிட்டுள்ளதாம் அர‌சு!


###########################


இருபது கண் ராவணனுக்கு
இருந்தபோதும்
சீதையின்
இரண்டே கண்கள்
என்னபாடு படுத்தியது

எதற்கும் முக்கியமில்லை
எண்ணிக்கை
பதத்திற்கு
ஒரு சோறென்பது
பாமர சாதுர்யம்..
###############################

வருகை


உன்வீடு
பூட்டியிலிருந்தது
உண்மையெனில்
நான் வந்து சென்றதும்
பொய்யில்லை.
பூட்டியிருக்கும்
போது பார்த்து
ஏன் வந்தாய் என்பதோ
வரும்போது
பூட்டப்பட்டிருந்தது
ஏனென்றோ
எல்லாமாதிரியும்
கேள்விகளைக்
கேட்டுக்கொண்டு
குழம்பிப் போகையில்
நான்
வந்து போனதற்கான
சுவடை
தேடிக்கொண்டிருப்பாய்
தடிமனாய்
பூசப்பட்டிருக்கும்
உன்வீட்டு
சிமெண்ட தரையில்.


################################

புடவை


ரகத்திற்கொரு

புடவை வீதம்
கணக்கிட்டால் கூட
முப்பதுக்கும் மேலிருக்கும்
உன்னிடம்.

புடவையில்தான்
நீ அழகென
நூறு முறையாவது
உண்மை பேசியிருப்பேன்.

முழுதும் மூட
முடியாதென்பதே
புடவைகள்
மீதான குற்றச்சாட்டு!

எப்போதும் பேசப்படுவதோ
செய்தி வாசிப்போரின்
புடவைகள்

புடவைகளால்
நேர்ந்த
சிக்கல் எனக்கு
புடவையே
சிக்கலானது
திரௌபதிக்கு...
#######################

தனி...தனி...
எடை போட்டு
விற்கப்படுகிற
சந்தையில்
தனிப்பூவின் அழகு
செல்லுபடியாவதில்லை.

மனுஷ்ய புத்திரன்

+-+-+-+-+-+-+-+-+-+-+-
இழந்த காதல்
+-+-+-+-+-+-+-+-+-+-+-
நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது

சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்

புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்
+-+-+-+-+-+-+-+-+-+-+-
அந்த இடம்
+-+-+-+-+-+-+-+-+-+-+-
போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்......


-மனுஷ்ய புத்திரன்

காதல் விழுதுகள்....

இந்தியாவில்
பாலைவனம் இருக்கிறதா?
அவள் பார்வை
எட்டாத தூரத்தில்
நின்று தேடுங்கள்

+-+-+-+-+-+-+-+-+-+-+-

இதழ்கள் உதிரும'
என தெரிந்தும்
பூக்கள் சுமக்கும்.
நீ மறப்பாய்
என தெரிந்தும்
சுமக்கிறேன்
உன் நினைவுகளை...

+-+-+-+-+-+-+-+-+-+-+-

அதே கோவில்....
அதேஅம்மன் .
அதேகுளம..
அதேபடிகள்
உனக்கு பிடித்த
அதே பச்சை சேலையில் நான்..
என் கரம் பற்றியிருக்கும்
கைகள் மட்டும் கணவரது...

+-+-+-+-+-+-+-+-+-+-+-

உனக்கு பிடித்தவைகள்
அனைத்தும்
எனக்கு தெரியும்
என்னை உனக்கு
பிடிக்குமா
என்பதை தவிர...

+-+-+-+-+-+-+-+-+-+-+-

"ஆட்டோகிராப்பில்
உன்
கண்ணீர் துளி பட்டதால்...
அழிந்த எழுத்துக்கள்..
சொல்லாமல் சொல்கிறது .
நீ சொல்லாமல் போன
உன் மனதை..."

+-+-+-+-+-+-+-+-+-+-+-

" அவளை படைத்து விட்டு
பிரம்மன்
கை கழுவி கொண்டான்...
அங்கே ....
தாமரை மலர்கள்
பூத்தன..."


+-+-+-+-+-+-+-+-+-+-+-

ஐ லவ் யூ என்றேன்
செருப்பு பிஞ்சுடும் என்றாள்
மெளனமாக ஒதுங்கிவிட்டேன்.
பயத்தினால் அல்ல
செருப்பு பிய்ந்தால்
வெயில் பட்டு அந்த
வெண் பாதங்கள்
புண்படுமே என்பதால்.

+-+-+-+-+-+-+-+-+-+-+-

யார் வேண்டுமானாலும்
உன் காதலனாக...
கணவனாக...
ஏன் கடவுளாக.
நான் மட்டுமே
உன் காதலாக...!


குறிப்பு:

இதை இப்படிக் கூட சொல்லலாம்,
'யார் வேணும்னாலும்
உதட்டை....
உடம்பை...
ஏன் உயிரைக்கூட தொடலாம்.
நான் மட்டுமே உன் மனசை....
!'

+-+-+-+-+-+-+-+-+-+-+-

நெல்லை ஜெயந்தா

நெல்லை ஜெயந்தா
+-+-+-+-+-+-+-+-+-+-+-

மேஜை மேலிருந்த
உன் மரக்குதிரை
நேற்றிரவு வேட்டைக்குப் போனது

வேடனுக்குத் தப்பிய
கானகப் புலியொன்று
இன்றிரவு
என் மேஜையில்
படுத்திருகிறது.
+-+-+-+-+-+-+-+-+-+-+-


வெற்றுக் காகிதங்களை
உறையிலிட்டு அனுப்பும் பழக்கமுள்ள பெண்
தன் சொற்களைத் தின்னும் பூதத்திடம்
ஒரு நாள் கண்ணீர் மல்கக் கேட்டாள்

வெற்றுக் காகிதங்களை
படித்துக் கொண்டிருக்கும் மனிதனை
ஒரு நாள்
தின்றுவர முடியுமா உனக்கு
என.
+-+-+-+-+-+-+-+-+-+-+-

காதல் கடிதம்மாலதி மைத்ரி

ஆண்டவன் துணை
அன்புள்ள பானுவுக்கு மாமா எழுதிக் கொள்வது
பணம் அனுப்பியது கிடைத்ததா
ஊதாரித்தனமாக செலவு செய்யாதே
கணக்கு எழுதிவை
தின்னு அழிக்காதே
வெள்ளை பூண்டு வெங்காயம்
மசாலா கறிசேத்துக்காதே
எல்லாம் உன் நன்மைக்குத்தான்
சினிமா கடைத் தெருன்னு சுத்தாதே
கீழ்வீட்டு அக்கா துணையுடன் வெளியே போவனும்
படியை விட்டு இறங்கும்போது
முந்தானையை இழுத்து போத்திக்கனும்
உடம்பைக் கொற நீ கேட்ட வளையலை
அடுத்த மாதம் கொடுத்து அனுப்புகிறேன்
என் மகள் மகாலஷ்மி அமெரிக்கா போவதற்கு
ஏற்பாடும் பணமும் தயார் செஞ்சிக்கிட்டு
கூடவே கொஞ்சம்கூலி விசா பொறுக்கினு வரேன்
அவள் ஊருக்குப் போயிட்டால்
இங்கேயே செட்டில் ஆகிடலாம்
எனக்கும் 55 ஆவப்போகிறது
இது வரைக்கும் உன் அக்காவுக்கு
துரோகம் செஞ்சது கெடையாது
ஒரு கொறையும் உனக்கு வைக்க மாட்டேன்
வீட்டுவேலைக்கு விசாகேட்டு
என் வாசல் மெதிச்ச ராத்திரி
நான் தூங்கவேயில்லை
யோசிச்சிதான் முடிவு பண்ணினேன்
ஐயோ பச்ச குழந்தை
அங்கபோய் எத்தனை கைமாறுதோ
நம்ம கையோடயே இருந்துட்டு
போகட்டுமேன்னு பிச்சைபோட்டுருக்கேன்
வரமா நெனச்சு காப்பாத்திக்கோ
எல்லாம் உன் நன்மைக்குத்தான் சொல்றேன்
ஒரு ஆறுமாசம் பொறுத்துக்கோ
பல்லாயிரம் மைலுக்கு அப்பால இருக்கன்னு
ஏதாவது துரோகம் பண்ண நெனச்ச
தேவடியா நாயே
ஆள்வச்சி தீத்துக் கட்டிடுவேன் ஜாக்கிரதை
பதில் எழுதவும்

அன்புடன்
மாமா

காதல்

காதல் சுவடு



மௌனமாய்

காதல் சதா ரணம்

சாதல் சாதாரணம்
காதல் சதா ரணம்
- ரா. பார்த்திபன்

+-+-+-+-+-+-+-+-+-+-+-

ஒரு
பைத்தியக்காரனைப் போல்
நான் இன்னும்
உன்னைப் பற்றியே
கனவு காண்கிறேன்.
நீயோ
பிள்ளை பெற்று
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பகலில் உறங்கப் பழகிவிட்டாய்....

+-+-+-+-+-+-+-+-+-+-+-

"விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"

- இரா. பார்த்திபன்

+-+-+-+-+-+-+-+-+-+-+-

"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவதுசந்தித்துக் கொள்ளட்டுமே"

-அறிவுமதி

+-+-+-++-+-+-+-+-+-+-+-+-+-+--+-+-+-+-+-+-+-
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?
- தபூ சங்கர்
+-+-+-+-+-+-+-+-+-+-+-

காட்சி

முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்...

மனுஷ்ய புத்திரன்

ஒரு காதலை தெரிவிக்கும்போது .....


ஒரு சிறு பெண்
தயங்கித் தயங்கி
தன் காதலை தெரிவிக்கிறாள்

அது அவள் முதல் காதலாக இருக்கவேண்டும்
அல்லது ஒவ்வொரு காதலையும்
தெரிவிக்கும்போதும்
அவள் அவ்வளவு
குழப்பமடைபவளாக இருக்க வேண்டும்

உண்மையிலேயே அது
புத்தம் புதியதாக இருந்தது
அப்போதுதான் உறையிலிருந்து
பிரிக்கபட்ட ஆடையின் வாசனையை
அ து நினைவூட்டுகிறது

அவளுக்கு ஒரு காதலை
எப்படித் தெரிவிக்கவேண்டும்
என்பதுகூட தெரிந்திருக்கவில்லை
அப்போது அவள் வீட்டைப் பற்றி பேசினாள்
அம்மாவைப்பற்றி பேசினாள்
பக்கத்துவீட்டு குழந்தைகளைப் பற்றி பேசினாள்
ஒரு அபத்தமான கனவைப் பற்றி பேசினாள்

அவள் விரும்பியதற்கு
நேர் எதிரானதையே
அவள் பேசினாள்

அது தவறாகவே புரிந்துகொள்ளப்படும்என்று
அவள் அஞ்சினாள்
ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டபோது
மிகவும் வியப்படைகிறாள்

தற்செயலாக திறந்துவிட்ட
ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில்
அவள் அப்படியே நின்றுகொண்டிருக்கிறாள்

அதைச் சொல்லும்போது அவளுக்கு
அவள் ஒத்திகை பார்த்த எதுவுமே
நினைவுக்கு வரவில்லை

அதை ஒரு உணர்ச்சிகரமானநாடகமாக
கையாளவே அவள் விரும்பினாள்
ஆனால் ஒரு நகைச்சுவைக் காட்சியைப்போல
அதைக் கையாண்டாள்

ஒரு காதலைத் தெரிவிப்பது
இன்னொரு மனிதனை முழுமையாக
சந்திப்பது என்பது அவளுக்குத் தெரியாது
அவள் அதை முதலில்
ஒரு சுவாரசியமான விளையாட்டாகவே தொடங்கினாள்
ஆனால் அந்தச் சந்திப்புநீணடதாக இருந்தது

ஒருவரை முழுமையா சந்திப்பது
அவ்வளவு பாரமானது என்று
அவள் யோசித்ததே இல்லை

அவள் திரும்பிப்போக விரும்பினாள்
அவளுக்கு அவளாக மட்டும் கொஞ்சம்
மூச்சுவிட வேண்டும்போல இருந்தது
ஆனால் அந்த சந்திப்புமுடிவடைவதாகவே இல்லை

அவள்
எல்லாவற்றையும்முழுமையாக
நம்பவிரும்பினாள்
எல்லாவற்றையும் முழுமையாக
சந்தேகிக்க விரும்பினாள்
தனக்கு யோசிக்க
வேறு விஷயஙகளே இல்லையாஎன்று
அவளுக்கு எரிச்சலாக இருந்தது
ஆனால் அவள் அதையே யோசித்தாள்

ஒரு சிறுபெண்
தனது காதலை தெரிவிக்கும்போது
அவ்வளவு நிராயுதபாணியாய் இருக்கிறாள்

இந்த உலகத்தின் மீது வைக்கும்
கடைசி நம்பிகையைப்போல
கருணையின்மைகளுக்கு முன்னே
ஒரு கடைசி பிரார்த்தனையைப் போல
அவ்வளவு பிரகாசமாக இருக்கிறது
அது

மனுஷ்ய புத்திரன்