+-+-+-+-+-+-+-+-+-+-+-
இழந்த காதல்
+-+-+-+-+-+-+-+-+-+-+-
நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது
மரங்கள் நடப்பது
சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்
ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்
+-+-+-+-+-+-+-+-+-+-+-
அந்த இடம்
+-+-+-+-+-+-+-+-+-+-+-
போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்
ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது
நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்......
-மனுஷ்ய புத்திரன்
Monday, January 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment