Monday, January 31, 2011

காட்சி

முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்...

மனுஷ்ய புத்திரன்

ஒரு காதலை தெரிவிக்கும்போது .....


ஒரு சிறு பெண்
தயங்கித் தயங்கி
தன் காதலை தெரிவிக்கிறாள்

அது அவள் முதல் காதலாக இருக்கவேண்டும்
அல்லது ஒவ்வொரு காதலையும்
தெரிவிக்கும்போதும்
அவள் அவ்வளவு
குழப்பமடைபவளாக இருக்க வேண்டும்

உண்மையிலேயே அது
புத்தம் புதியதாக இருந்தது
அப்போதுதான் உறையிலிருந்து
பிரிக்கபட்ட ஆடையின் வாசனையை
அ து நினைவூட்டுகிறது

அவளுக்கு ஒரு காதலை
எப்படித் தெரிவிக்கவேண்டும்
என்பதுகூட தெரிந்திருக்கவில்லை
அப்போது அவள் வீட்டைப் பற்றி பேசினாள்
அம்மாவைப்பற்றி பேசினாள்
பக்கத்துவீட்டு குழந்தைகளைப் பற்றி பேசினாள்
ஒரு அபத்தமான கனவைப் பற்றி பேசினாள்

அவள் விரும்பியதற்கு
நேர் எதிரானதையே
அவள் பேசினாள்

அது தவறாகவே புரிந்துகொள்ளப்படும்என்று
அவள் அஞ்சினாள்
ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டபோது
மிகவும் வியப்படைகிறாள்

தற்செயலாக திறந்துவிட்ட
ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில்
அவள் அப்படியே நின்றுகொண்டிருக்கிறாள்

அதைச் சொல்லும்போது அவளுக்கு
அவள் ஒத்திகை பார்த்த எதுவுமே
நினைவுக்கு வரவில்லை

அதை ஒரு உணர்ச்சிகரமானநாடகமாக
கையாளவே அவள் விரும்பினாள்
ஆனால் ஒரு நகைச்சுவைக் காட்சியைப்போல
அதைக் கையாண்டாள்

ஒரு காதலைத் தெரிவிப்பது
இன்னொரு மனிதனை முழுமையாக
சந்திப்பது என்பது அவளுக்குத் தெரியாது
அவள் அதை முதலில்
ஒரு சுவாரசியமான விளையாட்டாகவே தொடங்கினாள்
ஆனால் அந்தச் சந்திப்புநீணடதாக இருந்தது

ஒருவரை முழுமையா சந்திப்பது
அவ்வளவு பாரமானது என்று
அவள் யோசித்ததே இல்லை

அவள் திரும்பிப்போக விரும்பினாள்
அவளுக்கு அவளாக மட்டும் கொஞ்சம்
மூச்சுவிட வேண்டும்போல இருந்தது
ஆனால் அந்த சந்திப்புமுடிவடைவதாகவே இல்லை

அவள்
எல்லாவற்றையும்முழுமையாக
நம்பவிரும்பினாள்
எல்லாவற்றையும் முழுமையாக
சந்தேகிக்க விரும்பினாள்
தனக்கு யோசிக்க
வேறு விஷயஙகளே இல்லையாஎன்று
அவளுக்கு எரிச்சலாக இருந்தது
ஆனால் அவள் அதையே யோசித்தாள்

ஒரு சிறுபெண்
தனது காதலை தெரிவிக்கும்போது
அவ்வளவு நிராயுதபாணியாய் இருக்கிறாள்

இந்த உலகத்தின் மீது வைக்கும்
கடைசி நம்பிகையைப்போல
கருணையின்மைகளுக்கு முன்னே
ஒரு கடைசி பிரார்த்தனையைப் போல
அவ்வளவு பிரகாசமாக இருக்கிறது
அது

மனுஷ்ய புத்திரன்

Monday, August 16, 2010

காதலின் பின் கதவு - பழநிபாரதி

உனக்காக வைத்திருந்த
முத்தத்தில்
ஃப்ளோரைட் வாசம்!

உனக்காகப் பறித்த பூவில்
டீசல் தூசி!

உனக்காக வாங்கிய
வாழ்த்து அட்டையில்
மரத்தின் இரத்தம்!

எனது உலகத்திலிருந்து
ஏதுவுமில்லை உனக்கு!

காற்றை
அழுக்குபடுத்தாமல் ஓடும்
உனது குட்டிக் கார்!

வன்முறை அறியாத
இராணுவ வீரன்!

சிரிக்கக் கற்றுக்கொடுக்கும்
சீனத் தங்கை!

விபத்துகளைச் சந்திக்காத
விமானம்
ரயில்!

மதங்களற்ற
உனது பொம்மைகளின்
உலகத்திலிருந்து
முடிந்தால் கொடு
எனக்கொரு சிரிப்பை!

################################


இசைத் தட்டின் ஞாபகத்தில்
கடிகாரத்தில் படுத்துக் கிடக்கும்
முட்கள் நாம்!

பசி தீர்ந்த நகங்கள் பற்கள்
அபரிமிதமாய் விட்டுச் சென்ற
இறைச்சித் துண்டின் தனிமை
நம் காலம் !

தழுவும் அலைகளின் லயிப்பில்
பேசத் திணறிய நம் பாறைகளின்
உன் பிம்பங்கள்
உருவாக முடியாமல்
உடைந்து நொறுங்கின!

வண்ணத்துப் பூச்சிகள்
மாமிசம் உண்ணும் கனவுகளுக்கு
நீ உன் உறக்கத்தை
விட்டுக் கொடுத்திருக்கிறாய்!

கோபுரத்தில் புறாக்களும்
பிரகாரங்களில் வௌவால்களும்
ஒரே கோயிலில்
எப்படி வாழ்கின்றன என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

யுகபாரதியின் திருமண அழைப்பிதழ்....


தேவதை தேவையில்லை

தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்

படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு!

இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்!

காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்.
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு

சமயத்தில் நிலவு என்பேன்!
சமையலில் உதவி செய்வேன்!
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்!

ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு..

வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்!

வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்!

இளையபாரதி

'நினைச்சா பொறையேறும்'
நிஜமாயிருந்தா…
நீ செத்திருக்கனுமே
இந்நேரம்!

+-+-+-+-+-+-+-+-+-+-+-

நிலாவே…
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலீரம் மனதில் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னை போலவே
இன்னும் சிலதும்…
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை.

+-+-+-+-+-+-+-+-+-+-+-

விலக
விலக
புள்ளிதானே…
நீ எப்படி
விசுவரூபம்?

+-+-+-+-+-+-+-+-+-+-+-

உருவம் தவிர்த்து
உணரத்தொடங்கு
காதலோ – கடவுளோ!

+-+-+-+-+-+-+-+-+-+-+-
நான்
. ஆனாலும்
நீ மட்டும்
, ...


இளையபாரதி