Saturday, February 26, 2011

காதலித்துப் பார்! --வைரமுத்து

காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !


தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!


இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!

-வைரமுத்து

இப்பொழுதே என்னை காதலித்துவிடு,

"கூந்தலின்
ஒற்றை முடியென
சந்திப்பின் குறுகிய வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்…"

- சல்மா

"என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!"

-கனிமொழி

இப்பொழுதே
என்னை காதலித்துவிடு,
இல்லையென்றால்
அடுத்த ஜென்மத்தில்,
இதற்கும் சேர்த்து
நிறைய
காதலிக்க
வேண்டியிருக்கும்..!

-தபு சங்கர்

உன் முன்னால்

உன் முன்னால்
நானொரு
பிச்சைப் பாத்திரம்

படைப்பின் சாரம்
ஆண்
ஆணின் சாரம்
பெண்

காதல்
பழைய மது
நாம்
புதிய புட்டிகள்.
-அப்துல் ரகுமான்.

உனக்கக காத்திருந்த போது ..

நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.....

-கல்யாண்ஜி

கல்யாண்ஜி கவிதைகள்



தினசரி வழக்கமாகிவிட்டது

தபால்பெட்டியைத்திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவேஎந்தக்
கடிதமும் இல்லாதஏமாற்றம்.
இன்று எப்படியோஎன்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறுஇறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.


-கல்யாண்ஜி

குற்றவுணர்வுகள் ஏதுமில்லை
சந்தோஷமாகவே இருக்கிறது
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை
இவளுக்கும் இருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகின்ற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இருக்கின்றோம்
சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.

-கல்யாண்ஜி